தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. தான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று அதற்கென்று பெரும் முயற்சி எடுப்பவர்கள் சினிமாவில் பலர் உள்ளனர்.
ஆளவந்தான்-கமல் ஹாசன்:
ஆளவந்தான் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது.கமல், இதில் சைக்கோ வில்லனாகவும், இராணுவ வீரராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இதில், சைக்கோ வில்லன் கதாப்பாத்திரம் மொட்டைத்தலையுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி அந்த கதாப்பாத்திரம் 10 கிலோ எடை கூடியும் இருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டமான கதாப்பாத்திரத்தையும் அசால்டாக இந்த படத்தில் நடித்து கொடுத்தார் கமல்.
சிவாஜி-ரஜினிகாந்த்:
சில காலம் வரை மொட்டைத்தலையுடன் சினிமாவில் தோன்றியவர்களை வில்லனாகத்தான் சினிமா ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், சிவாஜி படத்திற்கு பிறகு அது ஒரு தனி ஸ்டைலாகவே மாறியது. படத்தின் முதல் பாதியில் அழகான சிகையுடன் வரும் ரஜினி, அடுத்த பாதியில் "பாஸ்..மொட்ட பாஸ்.." என்று மொட்டை கெட்டப்பில் வந்தார். இவர் எதை செய்தாலும் அதையே ஃபாலோ செய்யும் ரசிகர்கள், இவரின் மொட்டை கெட்டப்பையும் ஃபாலோ செய்தனர்.
சேது-விக்ரம்:
"ஒரு படத்தில் கடின உழைப்பு போட்டு நடித்தால் பரவாயில்லை..ஒவ்வொரு படத்துக்குமா இப்படி உயிரை கொடுத்து நடிப்பாங்க.." என்ற டைலாக் கண்டிப்பாக நடிகர் விக்ரமிற்கு பொருந்தும். தனது முதல் படம் முதல் இப்போது வரை தான் நடிக்கும் ஓவ்வொரு படத்திலும் அவ்வளவு அவ்வளவு விடா உழைப்பை போடுபவர், விக்ரம், இவர் பாலா இயக்கத்தில் நடித்திருந்த சேது படத்தின் க்ளைமேக்ஸிற்காக மொட்டையடித்து கொண்டார். இதுதான் அவரது முதல் படம், ஷங்கர் இயக்கியிருந்த ஐ படத்தில் நடிப்பதற்காகவும் அவர் தன் முடியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
கஜினி-சூர்யா:
15 நிமிடங்களுக்கும் நடந்தவற்றை மறக்கும் ஒரு மனநோயாளியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார், சூர்யா. படத்திற்காக உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது என அனைத்தையும் அசால்டாக செய்யும் நடிகர் இவர். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'கஜினி' படத்திற்காக மொட்டைபோட்டுக்கொண்டு நடித்தார். இந்த படம், இவரது சினிமா வாழ்க்கைக்கே பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
காஷ்மோரா-கார்த்தி:
கார்த்தி, விவேக், ஸ்ரீதிவ்யா போன்ற பலரது நடிப்பில் உருவாகியிருந்த படம், காஷ்மோரா. கார்த்தி முதன் முதலாக பேயாகவும் பேய் ஓட்டுபவராகவும் நடித்திருந்த படம் இது. இதில், நகரத்து இளைஞராகவும், வில்லத்தனமிக்க பேயாகவும் இரு வேறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார், கார்த்தி. வில்லன் கதாப்பாத்திரத்தில் நீண்ட தாடியுடனும் மொட்டை தலையுடனும் தோன்றும் இவரைப்பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்ததாக இவரது ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், கார்த்திக்கு நல்ல பாராட்டு கிடைத்தது.
தனுஷ்:
'கேப்டன் மில்லர்' பட நாயகன் தனுஷ், சமீபத்தில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் மொட்டை தலையுடன் இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவர் தனது 50ஆவது படத்திற்காக இது போன்ற லுக்கை மாற்றிக்கொண்டாரோ என சந்தேகித்துள்ளனர்.

