பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய மிகச்சிறந்த ஒரு வீரர் சுரேஷ் ரெய்னா.
2005-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2020-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி ஒரு தூண் என்றால் இன்னொரு தூண் சுரேஷ் ரெய்னாதான்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னா தனக்கு வந்த கேப்டன் பதவிக்கான வாய்ப்புகள் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். "நான் உத்தரப் பிரதேசம் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். பல அணிகள் என்னை கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடுவதற்கு அழைத்தன. ஆனால் நான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. தோனி என்னிடம் எப்பொழுதும் 'நான் கேப்டன், நீ துணைக் கேப்டன். நீ எங்கும் செல்லக்கூடாது' என்று சொன்னார்.
நான் என்னை எப்பொழுதும் அணிக்கான வீரராகதான் உணர்ந்திருக்கிறேன். சக வீரர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.
